Saturday 12 March 2016

தோல்வி என்பது வெற்றியின் முதல் படி!


ஆபிரிக்காவுக்கு சுற்றுலா போன ஓர் இளைஞன் ஒரு நாள் பசுமையான கிராமத்தின் வழியே நடந்து சென்றான். அங்கே ஒரு இடத்தில் யானைகள் நிறைய கட்டப்பட்டிருந்தன. அந்த யானைகளை சற்று உற்று கவனித்த அந்த சுற்றுலாப் பயணிக்கு ஒரே ஆச்சர்யம்.

அந்த பிரமாண்டமான விலங்கு ஒவ்வொன்றும் ஒரே ஒரு சிறு கயிற்றினால் மட்டும் கட்டப் பட்டிருந்தது. இவ்வளவு பெரிய உருவம் கொண்ட, வலிமை மிக்க யானை அந்த சிறு கயிற்றை ஒரு நிமிடத்தில் அறுத்து கொண்டு போகலாம், ஆனால் அந்த யானை அதற்கான முயற்சி செய்வதில்லையே ஏன் என்று அவன் வியப்படைந்தான்.

அருகில் இருந்த பாகனிடம் சென்று அவன் கேட்டான் : "இவ்வளவு பெரிய யானைகள் இந்த சிறு கயிற்றை அறுத்து கொண்டு போய்விடாதா?"

பாகன் சிரித்துக்கொண்டே சொன்னான்: "இந்த யானைகள் சிறிய குட்டிகளாக இருக்கும்போது இந்த சிறிய கயிற்றால்தான் கட்டினோம். அப்போது அந்த குட்டி யானை இழுத்துப் பார்க்கும்போது, இந்த கயிற்றினை அதனால் அறுக்க முடியவில்லை. தன்னால் கயிற்றை அறுக்க முடியாது என்று முடிவு செய்த குட்டி யானை, முயற்சி செய்வதை கைவிட்டு விட்டது. அதே குட்டி யானை பெரிதாக வளர்ந்தபின்பும், தன்னால் அந்தக் கயிற்றை அறுக்க முடியாது என்ற தோல்வி மனப்பான்மை தொடர்வதால், அது பெரிதாய் வளர்ந்த பின்னரும் கயிற்றை அறுக்க முயற்சி செய்வதில்லை."

பாகனின் பதிலைக் கேட்டு அந்த மனிதன் ஆச்சரியப்பட்டான்.

இந்த யானைகள் போல் நம்மில் எத்தனை பேர் இருக்கிறோம்!

வாழ்வில் ஏதோ ஒரு முறை முயற்சித்துப் பார்த்து அதில் தோற்றதும் துவண்டு போகிறோம்.
நம்மால் முடியாது என்று தோல்வி மனப்பான்மையை வளர்த்துக் கொள்கிறோம்.
அணுகுமுறையை மாற்றினால்,
திறனையும், வலிமையையும் வளர்த்துக் கொண்டு மீண்டும் முயற்சித்தால் வெற்றி பெறலாம் என்ற அடிப்படை உண்மையை மறந்து விடுகிறோம்.

தோல்வி என்பது வெற்றியின் முதல் படி.
தோல்வியில் இருந்து கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சிப்பது மட்டுமே வெற்றிபெற ஒரே வழி!

No comments:

Post a Comment